1996 ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் கிட்டதட்ட 3 தசாப்தங்கள் கழித்து ஒரு ஐசிசி தொடரை தலைமையேற்று நடத்தி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், உற்சாகத்தோடும் சாம்பியன் டிராபி2025 தொடரை வரவேற்றார்கள். அந்நாட்டில் நிதி பிரச்சனை இருந்து வரும் பொழுதும் பாகிஸ்தான் அணி பங்கு பெறாத போட்டியில் கூட மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பி வழிந்தார்கள். லாகூர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதலின் போது கிட்டத்தட்ட மைதானம் முழுமையாக நிரம்பி இருந்தது.  இந்த சூழலில் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான அணி சொந்த மண்ணில் நடக்கும் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது.

இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இனி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளின் போது பாதி மைதானம் கூட ரசிகர்களால் நிரம்பாது என்றும் கூறப்படுகிறது . பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியதால் இனி மைதானத்தில் போட்டியை பார்க்க ரசிகர்களை வர வைப்பது மிகவும் கடினம் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், “பாகிஸ்தான் விளையாடாத ஒரு போட்டியை கூட மக்கள் வரவேற்று ரசிப்பதை பார்க்க உற்சாகமான அனுபவமாக இருந்தது.

ஆனால் மீதமுள்ள போட்டிகளை பார்ப்பதற்கு மக்கள் மைதானத்திற்கு வருவதை உறுதி செய்வது சவாலாக இருக்க போகிறது. ஏனெனில் 29 வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய நிகழ்வை நாங்கள் நடத்துகிறோம். இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரைவாக வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ள.து மேலும் போட்டி நடத்துவதற்கான தொகை, டிக்கெட் விற்பனை என எங்களுக்கு வர வேண்டிய நிதி ஐசிசி இடம் இருந்து கிடைத்துவிடும். ஆனால் மக்களிடம் கிரிக்கெட் தொடர் நம்பிக்கை இழந்ந்தால் பின் நாளில்  இங்கு தொடரை நடத்துவது கேள்விக்குறியாகிவிடும். அது மட்டும் இன்றி காலியான மைதானங்களை ஒளிபரப்பாளர்கள் ஒளிபரப்பினால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர் கிடைப்பதிலும் பெரிய பாதிப்பு ஏற்படும்” என்று கூறியுள்ளார்.