
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரபல ரவுடியின் பிறந்தநாளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது திடீரென மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்ட முயன்றனர்.
அப்போது அவர்கள் போலீசாரை பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் சில போலீசார் காயமடைந்ததால் கேரள மாநில ஏ.டி.ஜி.பி வெங்கடேஷ் போலீசாருக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், போலீசார் பொதுமக்களை காப்பாற்றவும் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் துப்பாக்கியை உபயோகப்படுத்தலாம். வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய சொல்லும் போது போலீசார் துப்பாக்கியை கொண்டு செல்ல வேண்டும்.
அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முயற்சி செய்தாலோ, தாக்குவதற்கு தயாராக இருந்தாலோ தற்காப்புக்காக போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு தயங்கவே கூடாது. போலீசாரை தாக்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.