தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் நடன கலைஞர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஜிகர்தண்டா எக்ஸ் படம் சூப்பர் ஹிட் ஆனது. சினிமாவை தாண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவி செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் இயன்ற பல்வேறு விதமான உதவிகளை அவர் செய்து வருகிறார்‌. அவர் நடனத்தில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னுடைய நடனப்பள்ளியில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் மல்லர் கம்பம் கலையில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதாகவும், ஸ்கூட்டி வாங்கி கொடுப்பதாகவும் உறுதி கொடுத்தார். அதோடு அவர்களை வைத்து ஒரு படம் எடுக்க போவதாகவும் கூறினார். அவர் சொன்னபடி தற்போது முதல் கட்டமாக மாற்றுத்திறனாளி கலைஞர்கள் 13 பேருக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துள்ளார். இந்த பைக்குகள் விரைவில் மூன்று சக்கர வாகனமாக மாற்றிக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதோடு விரைவில் வீடுகள் கட்டித் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.