இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவி ஜெயா பரத்வாஜ். தீபக் சாகர் தன்னுடைய நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். ஜெயா பரத்வாஜ் ஒரு தொழிலதிபர். இவர் டெல்லியில் ஒரு விளம்பர நிறுவனத்தை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சாகர் நேற்று போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அவர் பாரிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் துருவ் பாரதி மற்றும் அவருடைய தந்தையான ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் மேலாளர் கமலேஷ் பாரிக் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

அதாவது ஜெயா பரத்வாஜ் உடன் ஷூ விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக பாரிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 10 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட நிலையில் வேலை முடிந்த பிறகு பணத்தை கொடுக்காததோடு பணம் குறித்து ஜெயா பரத்வாஜ் கேட்டதற்கு அவருக்கு கொலை மிரட்டலும் வந்துள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் அவருடைய நண்பர் 44 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கடந்த மாதம் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.