
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. சீனியர் வீரர்கள் ஓய்வு அறிவித்துள்ள நிலையில், இளம் வீரர்களுடன் இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
இந்தியா ஏ அணி கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தில் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு அதிகாரமற்ற டெஸ்ட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்றிருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது, அவர் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டு, பிரபலமான யார்க்ஷயர் அணிக்காக இங்கிலீஷ் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாட உள்ளார்.
ருதுராஜ், ஜூலை 22 முதல் செப்டம்பர் 20 வரை யார்க்ஷயர் அணிக்காக ஐந்து கவுண்டி போட்டிகளில் பங்கேற்கிறார். இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் இரண்டும் அடங்கும். அவர் யார்க்ஷயர் அணிக்காக விளையாடும் நான்காவது இந்திய வீரராகும். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் மற்றும் புஜாரா ஆகியோர் இந்த அணிக்காக விளையாடியுள்ளனர். “இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாடுவது என் கனவாக இருந்தது. யார்க்ஷயர் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு” என்று ருதுராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.