
இன்றைய காலகட்டத்தில் காபி குடிப்பது ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்ல, பலருக்குப் பரிச்சயமான பாணியாகவும் மாறியுள்ளது. ஆனால், ஒரு காபி உலகத்திலேயே மிக விலையுயர்ந்தது, அதுவும் பூனையின் மலத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்பதை கேட்டால் உங்களால் நம்ப முடியுமா…?
‘கோபி லுவாக்’ எனப்படும் இந்த காபி, சிவெட் பூனை எனப்படும் விலங்கின் மூலம் உருவாகிறது. இந்த பூனைகள், காபி செடியின் பழுத்த பழங்களை உண்ட பின், அந்த விதைகள் அவர்களின் வயிற்றில் புளிக்கப்படுகின்றன. பிறகு, அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் மலமாக வெளியேறும்.
இந்த மலத்தில் இருந்து விலகிய விதைகள், நன்கு சுத்தம் செய்யப்படுகின்றன. பின்னர் உலர்த்தப்பட்டு, வறுக்கப்பட்டு, சிறந்த தரத்தில் காபி பவுடராக மாற்றப்படுகின்றன. இதுவே கோபி லுவாக்.
இந்த வித்தியாசமான காபி, இந்தியாவின் கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த காபி பவுடர் மிகக் குறைவான அளவிலேயே தயாரிக்கப்படுகிறது. சுவை மிகவும் மென்மையானது. அமிலத்தன்மை குறைவானது. இயற்கையான புளிப்புச் செயல்பாட்டால் தனித்துவமான நறுமணம் உண்டு.
இதனால், இந்த காபி ஒரு கப்புக்கு ₹2500 முதல் ₹6000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18-ஆம் நூற்றாண்டில், இந்தோனேசியாவில் டச்சுக் குடியரசு ஆட்சி செய்த காலத்தில், உள்ளூர் தொழிலாளர்கள் காபி சாகுபடியில் ஈடுபட்டிருந்தாலும், அதை குடிக்க அனுமதிக்கப்படவில்லை.
அப்போது, சிவெட் பூனைகள் காபி பழங்களை உண்டு, அதனுடைய விதைகள் வெளியேறும் என்பதை அவர்கள் கவனித்தனர். அதனால் அந்த விதைகளை வைத்து தங்களுக்கே காபி தயாரித்து பருகினர். அதன் தனிச்சுவை மற்றும் நறுமணம், அதை உலக அளவில் பிரபலமாக்கியது.
இந்த விசித்திரமான காபி, தற்போது இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் சில தனியார் தோட்டங்களில் இதை பராமரிக்கின்றனர்.
சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த பூனைகளை கட்டிடப்புறங்களில் வைத்துப் பயன்படுத்துவதை அழுத்தமாக எதிர்க்கின்றனர். சில சந்தைகளில் இதற்கான பொய்யான பதிப்பு காபிகளும் விற்கப்படுகின்றன. எனவே, உண்மையான கோபி லுவாக் காபி வாங்கும்போது ஆதாரம் இருந்தால் மட்டுமே நம்பலாம்.