
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பருக்கெட் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஸ்வீட் கடையில், வாடிக்கையாளரிடம் விளம்பர படம் அச்சிடப்பட்ட பைக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் கடைக்கு கடும் எச்சரிக்கையுடன், வாடிக்கையாளருக்கு ரூ.15,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்த வழக்கை பருக்கெட் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமசிவம் தாக்கல் செய்தார். அவரது புகாரின்படி, ஸ்வீட் கடையில் சில பொருட்கள் வாங்கிய அவர், கடையின் விளம்பரத்துடன் கூடிய பிளாஸ்டிக் பையை தரும்போது, அதற்காக ரூ.20 வசூலிக்கப்பட்டது.
விளம்பரத்துடன் கூடிய பையை வாடிக்கையாளரிடம் பணம் பெறுவது, சரியானது அல்ல என கூறி அவர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணை முடிவில், இது சேவை குறைபாடாகும் என்றும், வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கும், சட்ட நடவடிக்கையின் செலவுக்கு ரூ.10,000 இழப்பீடாகவும், ரூ.5,000 வழக்குச் செலவாகவும், பைக்காக வசூலித்த ரூ.20ஐ திருப்பிச் செலுத்தவும் என மொத்தம் ரூ.15,020 ஐ பரமசிவத்திற்கு வழங்க கடைக்கு உத்தரவிட்டுள்ளனர்.