இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக 5, எஸ்டிபிஐ, புதிய தமிழகத்திற்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள புரட்சி பாரத்திற்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கட்சி சார்பில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.