
ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்தில் உள்ள லகான்பூர் வட்டத்தின் பெல்ட்கி கிராம பஞ்சாயத்தின் சார்பு கிராமமான ஆல்கா பெண்டோபானியில் கட்டப்பட்ட ஒரு கழிப்பறை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அந்தக் கழிப்பறையில் ஒரே அறைக்குள் அருகருகே இரண்டு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது சுகாதாரக் கட்டிடமா, காமெடி கட்டிடமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ரூ.24,000 செலவில் கட்டப்பட்ட இந்தக் கழிப்பறை, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தையும், திட்டங்களின் மேற்பார்வை இல்லாமையையும் காட்டுகிறது. “ஒரே நேரத்தில் இரண்டு பேர் கழிப்பறையைப் பயன்படுத்தலாம்” என்ற எண்ணத்தோடு இந்த மாதிரி அமைப்பு செய்திருக்கலாம் என்றாலும், இந்த ‘நவீன தொழில்நுட்பத்தை’ மக்கள் பயன்படுத்தவே இல்லை. மக்கள் இன்னும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர். இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ஸ்வச் பாரத் மிஷனின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
இவ்வகை தவறான திட்டபணிகள் குறித்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிக்கு தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட தொகுதி ஒருங்கிணைப்பாளரும் கிராம செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அந்த பகுதியில் கட்டப்பட்ட பல கழிப்பறைகள் முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன என்றும் புகார்கள் உள்ளன. சில இடங்களில் ‘புதுமையான’ தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் தேவையற்ற வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் திட்டங்களை நடைமுறையில் கொண்டு வருவது மட்டும் போதாது; அவற்றின் பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்பும் அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் திட்டத்தையே கிண்டலாக மாற்றியுள்ளனர் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும் இது போன்ற அலட்சியங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.