மதுரை மேலூர் அரிடாப்பட்டி பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைய வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சுரங்கம் வரக்கூடாது போராட்டங்கள் நடத்தினர். தமிழக அரசும் போராடிய பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருந்து சுரங்கம் வராது என்று உறுதி கொடுத்ததோடு சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. சமீபத்தில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை மதுரை மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் நேரில் சென்று சந்தித்து சுரங்கத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சுரங்கம் அமையாது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று மதுரை அரிடாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த முக்கிய கிராம தலைவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தனர். அதாவது சுரங்கம் ரத்தான அதற்கு முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி அவர்கள் நேரில் சந்தித்து அரிடாப்பட்டிக்கு வருமாறு அழைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பிறகு அரிடாப்பட்டி செல்கிறார். மேலும் அங்கு முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.