உத்தரப்பிரதேச மாநிலம் உசிஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்வர்கான் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அமித் குமார் வயலில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இது கொலை என சந்தேகிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தாராசந்த், பப்பு மற்றும் ஜாபர் ஆகிய மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையின்போது, இது தற்கொலை என உறுதி செய்யப்பட்டது.

ஜூன் 7ஆம் தேதி இரவு, பண்ணையில் அமித் மது அருந்திக் கொண்டிருந்தார்.பின்னர் பண்ணைக்கு சென்ற அவரது தந்தை மற்றும் சகோதரர்கள், அமித் ரத்தக் காயத்துடன் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர்.

அருகில் ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் அவரது மொபைல் ஆகியவை இருந்தன. போலீசார் சம்பவ இடத்தை சோதனை செய்தபோது, சுவரில் துப்பாக்கியால் சுட்ட தடையங்கள் இருந்தன.

தொடர்ந்து போலீசார் நடத்திய சிடிஆர், பேஸ்புக் மற்றும் மொபைல் அடிப்படையிலான விசாரணையில், அமித் கடந்த ஒரு வருடமாக உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகியுள்ளார்.

அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும், தொலைபேசி வாயிலாக ஆபாசமாக பேச வேண்டும், சந்தித்து உடலுறவு கொள்ள வேண்டும் என அவர் அடிக்கடி வற்புறுத்தியதாகவும், அதை அந்த பெண் நிராகரித்ததும் தெரியவந்தது. இதனால் மன அழுத்தத்தில் வீடியோ அழைப்பின் போது அமித் வானத்தை நோக்கி முதலில் சுட்டார். பின்னர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவத்தில் பெண் மீது எவ்வித குற்றச்சாட்டு ஏற்படுத்த முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். விசாரணை முடிவில், இது காதல் தோல்வியால் அமித் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.