பஞ்சாப மாநிலம் பதிண்டாவில், சமூக ஊடகங்களில் செல்வாக்கு கொண்ட காஞ்சன் குமாரி எனும் பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஜஸ்ப்ரீத் மன்ரோ மற்றும் நிம்ரத்ஜீத் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்தக் கொலையில் மூளையாக செயல்பட்ட அம்ரித்பால் மன்ரோ தலைமறைவாக உள்ளதாக பதிண்டா மாவட்ட எஸ்.எஸ்.பி. அம்னீத் கொண்டல் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை, பதிண்டா நகரில் உள்ள கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்ட காரில் காஞ்சனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், ஜூன் 11ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

காஞ்சன் சமூக ஊடகங்களில் ஆபாசமான உள்ளடக்கங்களை பதிவிட்டதாகக் கூறி, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் திட்டமிட்டு பதிண்டாவில் அவரை கொலை செய்துள்ளனர். “அவர் இளைஞர்களை பாதிக்கும் வீடியோக்களை பதிவிட்டார். நாங்கள் எச்சரித்தோம். அவர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. எனவே பதிண்டாவிற்கு அழைத்து வந்து கொன்றோம்,” என குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மோகா மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான அம்ரித்பால் மன்ரோ, 2022-ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தளம் சார்பில் தர்ம்கோட்டில் போட்டியிட்டவர். இவர்மீது முன்பும் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங்கை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக ஆர்வலராக செயலில் இருந்த இவர், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளவராவார். தற்போது அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காஞ்சனுக்கு முன்பாக கனடாவை தளமாகக் கொண்ட பயங்கரவாதி அர்ஷ் டல்லா மிரட்டல் விடுத்திருந்ததாகவும், கடந்த ஆண்டு அக்டோபரில் “ஆபாசமான” வீடியோக்கள் தொடர்பாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சனுக்கு இன்ஸ்டாகிராமில் 3.83 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்ததாகவும், வெவ்வேறு நகரங்களில் வீடியோ தயாரிக்கச் சென்றுவந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கொலை வழக்கு பஞ்சாபத்தை மட்டுமின்றி நாட்டிலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது போலீசாரால் தேடப்படும் சீக்கிய பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தான் தான் இன்ஸ்டால் பிரபலமை கொலை செய்ததாகவும் அவர் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதால் கொன்றதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் பஞ்சாபில் ஆபாசத்திற்கு இடமில்லை. எனவே இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு இதுதான் கதி என அவர் மிரட்டல் விடும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.