
உத்தரபிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் மனதை உடைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத 17 வயதான மாணவி ரியா பிரஜாபதி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். ரூ.800 கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதையே காரணமாக்கி, பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுக்கு வந்த ரியாவை பள்ளி நிர்வாகம் அனைவரின் முன்பும் அவமதித்து தேர்வு எழுத அனுமதிக்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மன உளைச்சலுக்குள்ளான மாணவி, வீட்டிற்கு சென்று தனது அறையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துள்ளார். மாணவியின் தாயார் பூனம் தேவி அளித்த புகாரின் பேரில், பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார், முதல்வர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர் தீபக் சரோஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சோகம் மிகுந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்களின் மனிதாபிமானம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.