மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவரை போலி திருமணத்துக்காக அழைத்துச் சென்று, அவரிடமிருந்து ரூ.2.5 லட்சம், நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என பெரும் தொகையை மோசடி செய்துள்ளனர்.

குவாலியர் அருகே கைலாஸ் பகுதியைச் சேர்ந்த மோனு ராஜ் ஷிவ்ஹரே, ஒரு தரகர் மூலம் பீகாரில் பெண் ஒருவர் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என அறிந்து, அந்தத் தரகர் வழியாக ரூ.2.5 லட்சத்தில் திருமண ஏற்பாடு செய்ததாக  கூறப்படுகிறது.

மணமகளாக நடித்த காஜல் குமாரி என்ற பெண்ணும், அவரது போலியான உறவினர்களும் சசாரத்தின் ஒரு தர்மசாலாவில் நடத்திய இந்த திருமணத்தில், ஒரு போலி பண்டிட் திருமணத்தை நடத்தினார்.

திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன், புதுமணப் பெண் கழிப்பறைக்கு செல்கிறேன் என கூறி மாயமாகி விட்டார். தொடர்ந்து, அவரது போலி மாமா, சகோதரி, தாய் உள்ளிட்ட அனைவரும் ரூ.2.5 லட்சம், நகைகள் மற்றும் பரிசுகளுடன் தப்பி ஓடினர்.

சசாரத்தின் தகியா மொஹல்லாவில் வாடகை வீட்டில் வசிக்கும் பிங்கி தேவியே, இந்த முறைகேடுகளை திட்டமிட்டு நடத்திய மூளையாக இருந்துள்ளார். இதையடுத்து, கர்கஹார் பகுதியைச் சேர்ந்த ராஜோ தேவி என்ற பெண், போலி அத்தையாக செயல்பட்டதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மணமகன் தரப்பினர், திருமண நிகழ்ச்சியின் பணப் பரிவர்த்தனையின் வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மோனு ராஜ் மற்றும் அவரது சகோதரர், “மத்தியப் பிரதேசத்தில் பெண்கள் குறைவாக உள்ளதால், பீகாரில் திருமணம் செய்ய நினைத்தோம்.

ஆனால் ஏமாற்றம்தான் கிடைத்தது” என வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை முழுமையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.