
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட பின் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையத்தைச் சேர்ந்த பரத் (14), அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பில் படித்து வந்துள்ளார். நேற்றிரவு, அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்கிய சிக்கன் பிரைட் ரைசை, வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வீட்டில் தயாரித்த தோசையும் சாப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து நள்ளிரவில் 4 முறை வாந்தி எடுத்த பரத், பின்னர் திடீரென கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளானார். உடனே அவரை பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனையில், ஏற்கனவே பரத் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பரத்தின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது உணவு ஒவ்வாமை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதைக் கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரியபாளையம் பகுதியை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.