உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் ராஜ்னி ஷர்மா என்ற பெண்ணுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சையின் போது பெண் மருத்துவரான ஷிகா ஜெயின் என்பவர் ஒரு பஞ்சு துண்டை வயிற்றில் வைத்து தைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து ராஜ்னி ஷர்மா கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் அதே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது மருத்துவர் அதை வயிற்றுப் புண்கள் என தவறாக கண்டறிந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ராஜ்னி ஷர்மாவின் உடல்நலம் மோசமானதால் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது வயிற்றில் பஞ்சு துண்டு இருந்தது தெரியவந்தது.

அதன் பிறகு அறுவை சிகிச்சை மூலம் அந்த பஞ்சு அகற்றப்பட்டது. இந்த நிலையில்  பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதனையடித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண் மருத்துவர் ஷிகா ஜெயின் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.