
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜகோத்ரா கிராமத்தில் சுரேஷ் கெங்கா பீமா அஹீர் என்பவர் வசித்து வருகிறார். இவரது 3 வயது மகன் நேற்று முன்தினம் திடீரென அழுததால் சத்தத்தை கேட்டு அவர் எழுந்து பார்த்தார். பின்னர் அவரது மனைவி கீதாவை அழைத்த நிலையில் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இதனால் சுரேஷ் பதட்டத்தில் தன் மனைவியை வீடும் முழுவதும் தேடினார். பின்னர் அவர் வீட்டிற்கு வெளியே தேடுவதற்காக சென்றபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. அதாவது அவரது வீட்டின் கொல்லைபுறத்தில் பாதி அளவு எரிந்த ஒரு மனித சடலம் கிடந்தது.
இறந்து கிடந்த நபர் ஒரு சுடிதார் அணிந்து இருந்ததோடு வெள்ளி கொலுசும் போட்டிருந்தார். அந்த நகைகள் மற்றும் ஆடைகள் அவரது மனைவி கீதாவுக்கு (22) சொந்தமானது என்பதால் சுரேஷ் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவர் தன் மனைவிதான் இறந்துவிட்டதாக எண்ணி உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது தான் தெரியவந்தது அது ஒரு ஆணின் சடலம் என்று. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.
அதாவது நேற்று காலை கீதா மற்றும் அவரது காதலன் பரத் அகிர் (21) ஆகியோரை ரயில்வே ஸ்டேஷனில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கீதா தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ திட்டமிட்டு ஹிர்ஜிபாய் சோலங்கி (54) என்ற ஊர் ஊராய் சுற்றி சுரிந்த நாடோடியை கொலை செய்துள்ளனர். இவருக்கு லிப்ட் கொடுப்பது போல் கீதாவின் கள்ளக்காதலன் அந்த முதியவரை தன்னுடைய பைக்கில் ஏற்றி சென்றுள்ளார்.
அந்த முதியவரை கொலை செய்து கீதா ஆடைகள் மற்றும் கொலுசு போன்றவற்றை அவருக்கு அணிவித்துவிட்டு அவரது உடலை தீவைத்து எரித்து பின்னர் தன் வீட்டு வாசலில் கொண்டு போட்டுள்ளார். திரிஷ்யம் படப்பாணியில் தான் இறந்து விட்டதாக குடும்பத்தினரை நம்ப வைத்து கள்ளக்காதலனுடன் ஓடி போவது தான் கீதாவின் திட்டம். மேலும் அவர்கள் கொலை செய்துவிட்டு ராஜஸ்தான் செல்ல ரயில்வே நிலையத்திற்கு சென்ற நிலையில் கீதா மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.