பிரபல இசையமைப்பாளரான இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கருவறைக்கு முன்பு இருக்கும் அர்த்தமண்டபத்தில் அவர் நுழைய முயன்ற போது அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்த்த மண்டபமும் கருவறை போன்றது என கூறி, இளையராஜா தவறுதலாக நுழைந்ததால் உடனே கோவில் நிர்வாகம் அவரிடம் எடுத்து கூறியதாகவும், அவரும் அதனை ஏற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்து வெளியே வந்தார் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் செல்லதுரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு விளக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் மரபுப் படியும், பழக்கவழக்கப்படியும் கோவிலின் அர்ச்சகர், பரிசாரகர் மடாதிபதிகளை தவிர இதர நபர்களை அர்த்த மண்டபத்திற்குள் அனுமதிக்கும் வழக்கம் கிடையாது. நேற்று இசையமைப்பாளர் இளையராஜா ஆண்டாள் கோயிலுக்கு ராமானுஜர் ஜீயர் உடன் வருகை புரிந்த போது ஜீயருடன் இணைந்து அர்த்த மண்டப வாசலில் படியேறினார். உடன் இருந்த சக ஜீயர் மற்றும் கோவில் மணியம் அர்த்தமண்டப வாசல் முன்பிருந்து வழிபடுமாறு இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டனர். இளையராஜாவும் அதனை ஏற்றுக்கொண்டு அர்த்த மண்டப வாசல் முன்பிருந்து வழிபாடு நடத்தினார் என விளக்கம் அளித்துள்ளார்.