
உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டில் இறுதியில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில் 2021 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இந்த கொரோனா பரவலால் உலகமே ஊரடங்கால் முடங்கிய நிலையில் அதில் இந்தியாவிற்கும் விதிவிலக்கு அல்ல. இந்தியாவிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று முழு உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த கடந்த 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாத்தூர் உட்கிர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஏராளமானவர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த அரசு மருத்துவமனையில் கூடுதல் அறுவை சிகிச்சை நிபுணராக சசிகாந்த் தேஷ் பாண்டே என்பவர் இருக்கிறார். இவர் ஜூனியர் டாக்டர் ஒருவருடன் அப்போது பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி விட்டதால் ஒரு கொரோனா நோயாளியை கொலை செய்யுமாறு ஒரு ஜூனியர் டாக்டரிடம் அவர் கூறுகிறார்.
அவர் சிகிச்சையில் இருந்த ஒரு நோயாளியை கொலை செய்யுமாறு கூறிய நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட கொரோனா நோயாளியான கவுசர் பாத்திமா என்ற பெண்ணின் கணவர் தயாமி என்ற 53 வயது நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. அப்போது என்னுடைய மனைவி கவுசர் பாத்திமா (41) கொரோனாவால் பாதிக்கப்பட்டார். நான் என் மனைவியை அந்த சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு ஜூனியர் டாக்டர் ஒருவர் சிகிச்சை கொடுத்து கொண்டிருந்தார்.
சம்பவ நாளில் ஜூனியர் டாக்டர் டாங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நான் அவரின் அருகில் இருந்தேன். அப்போது மூத்த டாக்டர் ஆன சசிகாந்த் தேஷ் பாண்டே என்பவர் அவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர் மருத்துவமனையில் உள்ள படுக்கை விவரங்கள் குறித்து கேட்ட நிலையில், பின்னர் அவர் என் மனைவியை கொலை செய்யுமாறு கூறினார். அதேபோன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிற நோயாளிகளையும் அவர் அவதூறாக பேசிய நிலையில் ஒரு வாரத்தில் என் மனைவி குணமடைந்து வீட்டிற்கு திரும்பியதால் நான் இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டேன் என்று கூறினார்.
இந்த புகாரைத் தொடர்ந்து சசிகாந்த் தேஷ்பாண்டே மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரின் வாக்குமூலத்தை பெற்று அவரது செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று மற்றொரு டாக்டரான டாங்கேவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலைதளத்தில் பரவும் இந்த ஆடியோவின் உண்மையை கண்டறிய போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மேலும் கொரோனா நோயாளியை கொலை செய்யுமாறு டாக்டர் பேசிய வீடியோ நான்கு வருடங்களுக்கு பின் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.