
அயோத்தியில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு நடைபெறும் என்று அந்த நகரின் தலைமை மதகுரு முகமது ஹனீப் அறிவித்துள்ளார். ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜும்மா தொழுகைக்காக இந்த மாற்றம் செய்யப்படுவதாகவும், மத நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, அயோத்தியில் உள்ள அனைத்து மசூதிகளும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொழுகையை நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையின் போது முஸ்லிம் சமூகத்தினர் யாரேனும் வண்ணம் பூசினால், அவர்களுக்கு புன்னகையுடன் பதிலளித்து “ஹோலி முபாரக்” என்று கூற வேண்டும் எனவும், இது மத நல்லிணக்கத்திற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும் எனவும் மதகுருக்கள் கூறியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அதிகாரிகள், இமாம்களுடன் ஆலோசனை நடத்தி தொழுகை நேர மாற்றம் குறித்து முடிவுகளை எடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், பல்வேறு மசூதிகளில் புதிய நேரங்களை அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி மாவட்ட ஆட்சியர் சந்திர விஜய் சிங் தெரிவித்தார்.
மற்றொருபுறம், பிகாரில் ஹோலி கொண்டாட்டங்களை இரண்டு மணி நேரம் நிறுத்தி, முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்க வேண்டும் என்ற கருத்தை தார்பங்கா நகர மேயர் அஞ்சும் ஆரா முன்வைத்துள்ளார். இதனால் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ ஹரி பூஷண் தாக்கூர், இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது சமூக ஒற்றுமையை பாதிக்கக்கூடியது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.