ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில், ஆன்லைன் கேமிங் காரணமாக ஒரு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேதா ராம்பூர் பகுதியில் வசித்து வந்த தீபக் ரத்தோர் மற்றும் அவரது மனைவி ராஜேஷ் ரத்தோர் ஆகியோர், ஆன்லைன் கேம்களில் ஏற்பட்ட ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடனை கொடுக்க முடியாமல் ஜூன் 2ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

தம்பதியரின் 5 வயது மகள் கதவை திறந்தபோது, இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அழுதார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபக் ரத்தோர், தனது மொபைல் மூலம் ஆன்லைன் கேம்களில் பணம் பந்தயம் வைத்து ஆடியதன் விளைவாக கடனில் சிக்கியிருந்தார். இதுகுறித்து தனது சகோதரியிடம் கூறியதுடன், அவர் எந்த தவறும் செய்யக்கூடாது என அறிவுறுத்தி, பண உதவிக்காக முயற்சி செய்வதாக உறுதியளித்திருந்தார்.

இருந்தாலும், கடன் மன அழுத்தம் காரணமாக தம்பதியர் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதியர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் ஆன்லைன் கேமிங்கின் ஆபத்துகளை மீண்டும் ஒரு முறை வெளிக்கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் எளிதாக கிடைக்கும் ஆன்லைன் கேம்கள், ஆரம்பத்தில் வெற்றி உணர்வை கொடுத்து பின்னர் பெரும் பண இழப்பை ஏற்படுத்தி, நபர்களை கடனில் சிக்க வைக்கும் நிலையில் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.