செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது. ஜாமினில் வெளியே வந்த அவருக்கு அடுத்த சில தினங்களில் அமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது. இதற்கிடையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குறித்த நிலை அறிக்கையை சீலிட்ட உரையில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்தது. அதைப் பார்த்த நீதிபதிகள் அதன் நகல்களை மனுதாரர்கள் மற்றும் தமிழக அரசுக்கு அனுப்புமாறு தெரிவித்தனர். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு வாரத்திற்குள் சம்மன் அனுப்ப வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கில் எடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை மே 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை மே 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.