குஜராத் மாநிலத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் ஜெகதீஷ் படேல் என்ற 39 வயது நபர் வசித்து வந்தார். இவரது மனைவி வைஷாலி பென் (30). இவர்களுக்கு 11 வயதில் விஹாங்கி என்ற மகளும், 3 வயதில் தரமிக் என்ற மகனும் இருந்துள்ளனர். இவர்கள் அமெரிக்கா செல்லும் கனவில் இருந்த நிலையில் ஹர்ஷ் படேல் மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஆகியோர் அந்த குடும்பத்தினை அமெரிக்காவிற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். அதன்படி இந்தியாவில் இருந்து முதலில் கனடாவுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வோம் என்று அவர்களிடம் கூறிய நிலையில் இந்த குடும்பத்தினர் அவர்களை நம்பி கனடா வழியாக அமெரிக்கா சென்றனர்.

ஆனால் கனடா மற்றும் அமெரிக்கா எல்லையை அடைந்ததும் ஹர்ஷ் படேல் மாயமானார். இதனால் இந்த குடும்பம் வழி தெரியாமல் தவித்த நிலையில் கடும் குளிரினால் உயிரிழந்தனர். இந்த வழக்கில் ஹர்ஷ் படேல் கடந்த 2024 ஆம் ஆண்டு சிகாகோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு நபரும் கைது செய்யப்பட்ட நிலையில் இருவருக்கும் அமெரிக்க நீதிமன்றம் 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி தற்போது  தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற  ஒரு குடும்பமே குளிரில் உறைந்து உயிரிழந்த சம்பவம் தற்போது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.