
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அறைக்குள் கைப்பேசி, கைகடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இதேபோல கம்மல், மூக்குத்தி, பெல்ட், முழுக்கை சட்டை அணியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையதில் நீட் தேர்வு மையத்திற்கு மோகனா ஸ்ரீ என்ற மாணவி இடம் மாறி வந்தார். அந்த மாணவி செய்வதறியாது அழுதார். இதனை பார்த்த காவல் ஆய்வாளர் தவமணி காவல்துறை வாகனத்தில் மோகனா ஸ்ரீயை ஹால் டிக்கெட்டில் இருந்த தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் அழைத்து சென்றுள்ளார். தக்க சமயத்தில் மாணவிக்கு உதவிய காவல் ஆய்வாளருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.