
சத்தீஸ்கர் மாநில குடிநீரில் யுரேனியம் அளவு மிக அதிகமாக இருப்பது மக்களுக்கு ஆரோக்கிய ஆபத்தை உருவாக்கி வருகிறது. துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் யுரேனியத்தின் அளவு, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைவிட மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி, குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் யுரேனியம் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் சில பகுதிகளில் லிட்டருக்கு 130 மைக்ரோகிராம் வரை யுரேனியம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அதிகமான யுரேனியம் அளவு, புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பலவிதமான ஆரோக்கியப் பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பலோட் மாவட்டத்தில் உள்ள குடிநீரில், யுரேனியம் அளவு அதிகமாக இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. கடந்த ஜனவரியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு நடத்தியது. அதன் முடிவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளை தாண்டியது தெரியவந்தது.