ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் இப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் ‘சவுத் பார்ஸ்’ (South Pars) இயற்கை எரிவாயு வயல் மீது புதன்கிழமை அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. ஈரானின் தெற்கு புஷெர் மாகாணத்தில் உள்ள இந்த எரிவாயு நிலையங்கள் தாக்கப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், எரிவாயு வயல்களில் இருந்து ராட்சத தீப்பிழம்புகளும் புகையும் விண்ணை முட்டும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்தத் தாக்குதல் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் இஸ்ரேலின் ஒரு முக்கிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

​இந்தத் தாக்குதலால் கடும் கோபமடைந்துள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகச் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை அடுத்த சில மணிநேரங்களில் தாக்கப்போவதாகப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாகச் சவுதியின் ‘சாம்ரெஃப்’ சுத்திகரிப்பு நிலையம் மற்றும் யுஏஇ-யின் ‘அல் ஹசன்’ எரிவாயு வயல் ஆகியவை தங்களது இலக்கு பட்டியலில் இருப்பதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்தப் போர் பதற்றத்தின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 4 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. போர் தீவிரம் அடைந்தால் உலகளவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன.