திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தன் மீதும், பிள்ளைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி எஸ்.பி-யிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து வெங்கடேசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவி பெயர் கங்கா.

எங்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றதாக மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராததால் நான் அவரை அழைக்க சென்றேன். அப்போது என் மனைவியின் உறவினர்கள் அவதூறாக பேசி என்னை தாக்கினார்கள். மனைவியை என்னுடன் வாழ அனுப்ப மறுப்பு தெரிவிக்கின்றனர்.

தாய் இல்லாமல் 3  பிள்ளைகளையும் என்னால் பராமரிக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு மனவேதனையில் இருக்கிறேன். உறவினர்களிடமிருந்து எனது மனைவியை மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.