திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் தற்போது 4 மாத கர்ப்பிணி ஆக இருக்கும் நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஆந்திராவுக்கு சென்றார். இதற்காக அவர் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் சென்றுள்ளார். இந்தப் பெண் வேலூர் அருகே ரயில் சென்ற போது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் இருந்த சிலர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவே அந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.

இதனால் அந்த பெண்ணை அவர்கள் கீழே தள்ளி விட்டுவிட்டு வேறொரு பெட்டிக்கு தப்பி சென்று விட்டனர். அந்தப் பெண் தண்டவாளத்தின் அருகே பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.