
இந்தோனேசியாவின் தென் பூட்டான் மாவட்டம், பௌடுகா பகுதியில் உள்ள மஜபஹித் கிராமத்தைச் சேர்ந்த 63 வயதான விவசாயி லா நோட்டி, கடந்த வெள்ளிக்கிழமை காலையில் தனது பண்ணைக்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
தொடர்ந்து பல மணி நேரமாக காத்திருந்த குடும்பத்தினர், அப்பகுதியில் தேடத் தொடங்கினர். அவரது மோட்டார் சைக்கிள் பண்ணை அருகே உள்ளதைக் கண்டதும், அவர்கள் விவசாயியை தேடி அலைந்தனர்.
அப்போது அருகிலுள்ள தோட்ட பகுதியில் சில நூறு மீட்டர் தூரத்தில் ஒரு பைதான் பாம்பு (8 மீட்டர் நீளமுடையது) மண் மேற்பரப்பில் கிடப்பதை ஒருவர் கவனித்தார். பாம்பு நடக்க முடியாத அளவுக்கு வயிற்றுப் பகுதி அதிகம் வீங்கி, அது மனித உடலை விழுங்கியதாக சந்தேகம் எழுந்தது.
View this post on Instagram
உடனடியாக கிராம மக்கள் அந்த பாம்பை கொன்றனர். பிறகு அதன் வயிற்றைப் பிளந்தனர். அதில் இருந்து முழுமையாக விழுங்கப்பட்ட மனித உடல் வெளியே வந்தது. அதனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டதில், அது லா நோட்டியின் சடலம் என்பது உறுதிசெய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மஜபஹித் கிராமத்தின் பாதுகாப்பு அலுவலர் செர்து டிர்மான் கூறியதாவது, “வீட்டில் திரும்பாத விவசாயியை தேடும் போது, அவர் வாகனம் அப்பகுதியில் இருப்பதை உறுதிப்படுத்தினோம். முதலில் பாம்பின் உடல் அமைப்பைக் பார்த்ததும் ஒருவரை விழுங்கி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. பின்பு வெட்டி பார்த்தபோது உண்மை வெளிவந்தது” என்றார்.
இச்சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. @therealtarzann என்ற இன்ஸ்டாகிராம் பயனரான மைக் ஹோல்ஸ்டன் இந்த நிகழ்வின் நேரடி வீடியோவை பதிவேற்ற, அது இணையத்தில் வைரலாக பரவியது. பலரும் அதில் துயரத்தையும், அச்சத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள மக்கள் எதிர்காலத்தில் பைதான் பாம்புகளால் ஏற்படக்கூடிய உயிர் அபாயங்களை உணர்த்தும் சம்பவமாக இது இருக்கிறது. தற்போது அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டு, வனபகுதிகளில் தனியாகச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.