திருநெல்வேலி பாளையங்கோட்டையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண், ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பின் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை கீழ்நத்தம் மீனாட்சிசுந்தரம் நகரைச் சேர்ந்த தாசன் (70), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெல்லை மண்டல முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

தாசன், 2016-ம் ஆண்டு பணியில் இருந்தபோது, பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்த பெனிட்டா (34) என்ற பெண்ணுடன் அறிமுகமானார். அப்போது, “உங்கள் மகள்களுக்கு மத்திய அரசில் வேலை வாங்கித் தருகிறேன்” என பெனிட்டா கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய தாசன், 2 தவணைகளாக ரூ.8 லட்சம் பெனிட்டாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் 2020-ல் தாசன், பாளையங்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது பெனிட்டா தலைமறைவானார். இதுதொடர்பான வழக்கு நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெனிட்டாவை கைது செய்ய  உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, பாளையங்கோட்டை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி, முன்தினம் பெனிட்டாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிறகு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயக்கம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெனிட்டாவுக்கு, தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.