டெல்லி மெட்ரோவில் பாம்பு நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் பெட்டியில் ஒரு பாம்பு காணப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் பீதியுடன் அலறி ஓடுவதும், சிலர் மெட்ரோவின் இருக்கைகளின் மீது ஏறி தங்களை காப்பாற்ற முயல்வதும் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சி 30 வினாடிகள் கொண்ட வீடியோவில் பதிவாகி உள்ளது. இதில், பயணிகள் அவசரகால சிவப்பு பொத்தானை அடிக்க ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வது, பின்னர் அந்த பொத்தானை பலமுறை அழுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சில நிமிடங்களுக்கு பின்னர் மெட்ரோ ஒரு நிலையத்தில் நின்று கதவுகள் திறக்கப்படுவதும், வெளியில் ஏராளமான பயணிகள் இருப்பதையும் காணலாம். இந்த வீடியோவில் பெண்கள் மட்டுமே இருப்பதையடுத்து இது பெண்கள் பெட்டியில் நடந்த சம்பவம் என ஊகிக்கப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Keerty Chauhan (@chauhankeerty)

இந்த பாம்பு எங்கிருந்து மெட்ரோவுக்குள் நுழைந்தது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. சிலர் மழைக்காலத்தில் வெளி பகுதிகளில் இருந்து அத்தகைய உயிரினங்கள் மெட்ரோவுக்குள் நுழைவது சாதாரணம் எனக் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான ரீல் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. “டெல்லி மெட்ரோ போக்குவரத்துக்கு மட்டும் இல்லை, வனவிலங்குகளுக்கும் இடமாக மாறி வருகிறது” என அந்த யூசர் எழுதியுள்ளார்.

இதுவரை இந்த ரீல் 5.3 லட்சம் பார்வைகளும், 6,000 லைக்குகளும், 500-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. “இன்னும் ஒரு புதிய பயம் இன்று உருவானது”, “இந்த வீடியோ கல்லூரி நண்பர்கள் ஒன்றாக பயணம் செய்யும் சமயம் போல உள்ளது”, “பாம்பு வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டிருக்குது போல” என பலரும் சிரிப்பு கலந்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சில பயனர்கள் இந்த வகை சம்பவங்கள் மீதான மெட்ரோ நிர்வாகத்தின் கவனத்தன்மை குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் மெட்ரோ பயணிகளில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.