கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும் செபாஷ்டின் (49) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் சந்தோஷுடன் கடந்த ஒன்றரை வருடங்களாக சேர்ந்து இருந்த நிலையில் தங்களுடைய கள்ளக்காதலுக்கு அவர் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி இருவரும் சேர்ந்து சந்தோஷை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன் பிறகு உடல் நலம் சரியில்லாததால் தன்னுடைய தம்பி இறந்து விட்டதாக ஷீபா அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய கழுத்து மற்றும் உடல் பகுதியில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி திருச்சூர் காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு சென்று சந்தோஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் காவல்துறையினர் விசாரணை நடத்துவதை தெரிந்த கொண்ட செபாஸ்டின் பயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது. மேலும் இதைத்தொடர்ந்து ஷீபா மற்றும் செபாஸ்டின் இருவரையும் அவர்கள் கைது செய்தனர்.