ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலைகளில் உலா வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று காட்டை விட்டு வெளியேறியது. அது திம்பம் மலைப்பாதையில் 18 வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் சுற்றி திரிந்ததாக தகவல் வெளியானது.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை புலி சாலையின் தடுப்பு சுவற்றில் நடந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை புலி நடமாட்டத்தை நேரில் கண்டு அச்சம் அடைந்தனர்.

அவர்கள் தங்களது வாகனங்களை தூரத்தில் நிறுத்தியப்படியே நின்று கொண்டு சிறுத்தைபுலி நடந்து செல்வதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.