
தமிழ்நாட்டில் குறவன், குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இணையதளத்தில் குறவன் குறத்தி என தேடும் போது ஆபாச நடனங்கள் வருவதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார். மேலும் இணையத்தில் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்க வேண்டும் என்றும், ஆபாச நடனமாக இருந்தால் இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்க கூடாது. குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனம் ஆடினால் புகார் அளிக்க தனி பிரிவை உருவாக்க வேண்டும்.ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறவன் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஜாதி பழங்குடியினரை அடையாளப்படுத்தும் நடனங்கள் எதுவும் இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், குற்றம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், அப்போதுதான் அத்தகைய சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்துவது, சிறுமைப்படுத்துவது நடக்காது என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.