மகாராஷ்டிராவில் அரசு அதிகாரி ஒருவரிடம் ஏற்பட்ட தகராறின் போது பெண்ணின் தோளில் பிடித்துத் தள்ளிய விவகாரம் தொடர்பான வழக்கில் மும்பை  உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பாலியல் நோக்கம் இல்லாத பட்சத்தில், ஒரு பெண்ணின் தோளில் பிடித்துத் தள்ளும் செயல் தானாகவே பாலியல் தொல்லையாகிவிடாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது மகாராஷ்டிராவில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பெண் பிளாக் டெவலப்மென்ட் ஆபீசர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த கிரிஷ் நிகோண்டா பாட்டீல் என்ற நபர், அங்குப் பெண் அதிகாரியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அலுவலக ஆவணங்களைக் கிழித்ததுடன், அந்தப் பெண்ணின் வலது தோளில் பிடித்து அழுத்தி அவரைத் தள்ளியுள்ளார். இதனால் தனக்கு அவமானமும் சங்கடமும் ஏற்பட்டதாகக் கூறி அந்தப் பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கிராம சர்பஞ்ச் மற்றும் அங்கிருந்த மற்றொருவரின் சாட்சியங்களும் இந்த நிகழ்வை உறுதிப்படுத்தின. இதன் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அபய் மந்த்ரி தலைமையிலான ஒற்றை நீதிபதி பெஞ்ச், இது ஒரு அலுவலகப் பணி நிமித்தமான தகராறின் காரணமாகவே நடந்துள்ளது. இதில் வெளிப்படையான பாலியல் நோக்கமோ அல்லது பாலியல் ரீதியான சைகைகளோ இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே இதில்  இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 354A என்பது வெளிப்படையான பாலியல் தொடுதல்கள், பாலியல் உதவிகள் கோருவது அல்லது பாலியல் வர்ணனை குறிப்புகளை மட்டுமே குறிக்கும். எனவே, நிர்வாக ரீதியான தகராறு என்பதால் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பொருந்தாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

பொது ஊழியரை அவரது அதிகாரப்பூர்வ கடமையைச் செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் உடல் ரீதியான வன்முறைக்கான குற்றச்சாட்டுகள் தொடரும் என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் குற்ற மிரட்டல் விடுத்தலுக்கான குற்றச்சாட்டு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அரசு ஊழியரைத் தாக்கி பணியைத் தடுத்தல் காயப்படுத்துதல் மற்றும் பெண்ணின் மானபங்கப்படுத்தும் நோக்கத்துடன் வன்முறை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.