கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிஜீன்(32) என்ற என்ஜினீயர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அதே நிறுவனத்தில் கடலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் பணிபுரிந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அதன் பிறகு லிஜீன் வேறு ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதன் பிறகு பிரியதர்ஷினி உடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி தனது காதலருடன் பேச பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் லிஜீனுக்கு சொந்த ஊரில் திருமணம் ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனை அறிந்த பிரியதர்ஷினி தனது காதலன் வீட்டிற்கு வந்து அவரது வீட்டிற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள லிஜீன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இளம்பெண் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு இளம்பெண் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிரியதர்ஷினி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று லிஜீனுக்கு சென்னையில் இருக்கும் தேவாலயத்தில் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது பிரியதர்ஷினி தேவாலயத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை குண்டு கட்டாக ஆட்டோவில் தூக்கி சென்றனர். அவன் காவல் நிலையத்திற்கு வருவான். நீ ஆட்டோவில் வா என கூறி அவரை அழைத்துச் சென்றனர். அப்போது என் வாழ்க்கை போச்சே என அந்தப் பெண் கதறி அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.