அமெரிக்காவின் லேக் தாஹோ பகுதியில் உள்ள விடுமுறைக்கால இல்லம் ஒன்றில், ஜூலை 4-ஆம் தேதி கொண்டாட்டத்திற்காகப் படகு சவாரி செய்யத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்திற்கு எதிர்பாராத மரண பயம் காட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அந்த இல்லத்தின் கேரேஜ் பகுதியில் இரண்டு சிறுமிகள் தங்களது குளிரூட்டும் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த குப்பைத் தொட்டியைக் கிளறிக்கொண்டிருந்த காட்டுக்கரடி ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் கரடிகள், இந்த முறை மாறாக அச்சிறுமிகளை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து வரத் தொடங்கியுள்ளது. இதைக் கண்டு பதறியோடி வந்த அவர்களது தந்தை கோர்ட்லண்ட் கோர்விட்ஸ், சற்றும் தாமதிக்காமல் கேரேஜ் கதவு அருகே எப்போதும் தயாராக வைத்திருக்கும் கரடிகளை விரட்டும் சிறப்புப் பாதுகாப்பு ஸ்ப்ரேவை  எடுத்து அதன் மீது அதிரடியாக அடித்துள்ளார்.

அந்த ஸ்ப்ரேயின் வீரியம் தாங்காமல் கரடி உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி ஓடிய நிலையில், காற்றில் பரவிய அந்த ஸ்ப்ரேயின் வேதிப்பொருள் தந்தையின் முகத்திலும் அடித்ததால் அவரும் கடுமையான இருமலுக்கு ஆளாகிப் பாதிப்படைந்துள்ளார்.

இந்த ஒட்டுமொத்தப் பதைபதைக்கும் மோதல் காட்சியும் அங்கிருந்த கேமராவில் பதிவாகி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வரும் சூழலில், கரடிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக இந்த ஸ்ப்ரேவை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என அவர் அட்வைஸ் செய்துள்ளார்.