நடப்பதெல்லாம் நன்மைக்கே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா விதத்திலும் நன்மைக்கே என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்டனர். மேலும் ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் இறுதி செய்யும் வரை ஓபிஎஸ் உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

பொதுக்குழுவில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் உள்ளிட்ட முடிவுகளை எடுக்க வேண்டும். பொது குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் அவை தலைவரின் பரிந்துரையின் படி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். மேற்கண்ட உத்தரவுகள் வரவுள்ள ஈரோடு கிழக்கு இடை தேர்தலுக்கு மட்டுமே என தெரிவித்திருந்தது.

ஓபிஎஸ் தரப்பினரை பொதுக் குழுவில் உள்ளடக்கியே முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு வரவேற்றுத்தக்கது என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா விதத்திலும் நன்மைக்கே என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.