
வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றும் சீன விஞ்ஞானி ஒருவர், அமெரிக்காவிற்கு உயிரியல் நோய்க்கிருமிகளை சட்டவிரோதமாக கடத்தியதாகக் கூறி, எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் செங்சுவான் ஹான் என்ற 36 வயதான நபர், மிச்சிகன் மாநில டெட்ராய்ட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், உயிரியல் வட்டப்புழுக்கள் போன்ற ஆபத்தான கிருமிகள் அடங்கிய நான்கு உயிரியல் பொருள் பாக்கெட்டுகளை சீனாவிலிருந்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி எப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல் கூறியதாவது, “அமெரிக்காவிற்குள் உயிரியல் பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியது மட்டுமல்லாமல், அதிகாரிகளிடம் பொய்யாக பதிலளித்ததற்கும், நாட்டின் உயிரியல் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையாக இதை எங்களால் ஏற்க இயலாது. இதுபோன்ற செயல்களை தடுக்க திடமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
செங்சுவான் ஹான் விசாரணையின் போது தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் எப்.பி.ஐ. கண்காணிப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக இதேபோல், ஏற்கனவே யுன்கிங் ஜியான் மற்றும் ஸுன்யோங் லியு ஆகிய இரு சீனர்கள், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூஞ்சைக் கிருமிகளை கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் விசாரணையில், “எங்களுக்கு தெரியாமலே பையில் யாரோ வைத்து இருக்கலாம்” என்று கூறினார்கள். ஆனால், இது தேசிய பாதுகாப்புக்கு எதிரான செயல் என எப்.பி.ஐ. உறுதியாகக் கண்டித்து, இருவரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவங்கள் மூலம், சீன விஞ்ஞானிகள் தங்களுடன் உயிர் ஆபத்தான கிருமிகளை அழைத்து வருவதை எச்சரிக்கையாக கவனிக்கிறது அமெரிக்கா. தொடர்ச்சியாக நடக்கும் இந்த சம்பவங்கள், உலக நாடுகளின் உயிரியல் பாதுகாப்பு நம்பிக்கையில் கேள்விக்குறிகளை எழுப்பி வருகின்றன.