தமிழகத்தில் சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் பிறகு இந்த ஆன்மீக சொற்பொழிவு நடத்திய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி இனி பள்ளிகளில் அனுமதி இன்றி நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம் பி ஜோதிமணி தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது;

பார்வை மாற்றுத்திறனாளியான தமிழ் ஆசிரியர் திரு.சங்கர் பகுத்தறிவு பற்றிப் பேசுகிறார். தவறு நடப்பது தெரிந்ததும். அச்சமற்று உடனடியாக தட்டிக்கேட்கிறார். அதில் மாணவ சமூகத்தின் மீது அன்பும், அவர்கள் எதிர்காலத்தின் மீதான ஆழ்ந்த அக்கறையும் வெளிப்படுகிறது. ஆனால் மாணவிகளிடையே உரையாற்ற அழைக்கப்பட்டவர் மாணவிகள் மனதில் அறிவியலுக்கும்,நவீன காலத்திற்கும் பொறுத்தமில்லாத, அவர்கள் சிந்தனையை மழுங்கடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

அவர் தவறை ஆசிரியர் சங்கர் தட்டிக்கேட்கும் போது எதிர்கொள்ள முடியாமல் ,ஆசிரியர் பெயரைக் கேட்கிறார். அவரை மிரட்டுகிறார். ஏன் அந்த ஆசிரியர் பெயர் சங்கராக இல்லாமல் ஜோசப் ஆகவோ, முகமது ஆகவோ இருந்தால் என்ன? அவர்கள் எதிர்கேள்வி கேட்கக் கூடாதா? பகுத்தறிவு பற்றிப் பேசக்கூடாதா? மாணவ சமூகத்தின் எதிர்காலம் குறித்து கவலைப் படக்கூடாதா? ஒருவரை சாதி,மத,பாலின ரீதியாக அடையாளப்படுத்தி அவரது நியாயமான கருத்தை திசைதிருப்ப முயல்வது ஆபத்தானது. ஒரு அழுகிப்போன மனநிலை. இதனால தான் கல்வி பகுத்தறிவு சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். தமிழ்நாடு ஆசிரியர் திரு. சங்கரைப் போல ஏராளமானவர்களை உருவாக்கியிருக்கிறது என்பதில் பெருமை அவருக்கு எனது அன்பும் , பாராட்டுகளும்!

“>