
பஞ்சாப் மொஹாலியில் உள்ள ஷாப்பிங் மாலில் நேற்று முன்தினம் மாணவர் ஒருவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவர் 17 வயதான அபிஜித் என அடையாளம் காணப்பட்டார். தனது தந்தையுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்திற்கு பிறகு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையினரின் அறிக்கைப்படி, நேற்று முன்தினம் காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மாலின் நான்காவது மாடியில் இருந்து ஒருவர் குறித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
இதையடுத்து காவல்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அபிஜித்தின் தந்தை மன்மோகன் சிங் தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
நேற்று தனது மகனை படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தை குறைக்கவும் அறிவுறுத்தினேன். இது ஒரு சிறிய வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. பின்னர் அபிஜித் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் உங்கள் மகன் இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது என்று தெரிவித்தார்