
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் t20 போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 166 ரன் இலக்கை நோக்கி ஓடிய இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அரை சதம் அடித்து களத்தில் நின்ற திலக் வர்மா கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்களும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து இலக்கை எட்ட வைத்தார்.
இதில் அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் என்ற விருதையும் பெற்றார். இந்த போட்டியில் பல முன்னணி வீரர்கள் தடுமாறினர். இருப்பினும் திலக் வர்மா மட்டும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பலரும் பாராட்டினர்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியதாவது, இவருக்கு பதற்றமும், பயமும் இல்லை. 19 ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை, ஆனாலும் அவர் எந்த ஒரு அழுத்தத்தையும் வெளியே காட்டாமல் மகிழ்ச்சியுடன் இருந்தார். பின்னர் 20 ஆவது ஓவரின் போது சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக போட்டியை முடித்து வைத்தார்.
தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இது போன்ற போட்டிகளை மிகவும் இயல்பாக கொண்டு சென்று வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளார். அவரைப் போன்ற தன்னம்பிக்கை திலக் வர்மாயிடம் உள்ளது. அவரது மன உறுதி பிரமிப்பாக உள்ளது. இனி வர இருக்கும் போட்டிகளில் கூட அவர் இன்னும் சிறப்பாக விளையாடி பினிஷிங் செய்வார் என்று கூறினார்.