சென்னையில் தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் மாணவர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார், ஐ.ஏ.எஸ் பதவியை விட்டு விலகி ஏன் அரசியலில் நுழைந்தீர்கள்? மக்களுக்கு உதவ வேண்டுமெனில் சமூக சேவை செய்திருக்கலாமே என கேள்வி எழுப்பினார். பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது, நான் அரசியலை எப்படி பார்க்கிறேன் என்றால் அரிஸ்டாட்டிலின் வழிப்படி பார்க்கிறேன்.”மனிதநேயத்தின் உச்சம் அரசியல்”என்ற அரிஸ்டாட்டில் கோட்பாட்டின்படி நடக்கிறேன். திறமையானவர்கள் அனைவரும் அரசியலில் இருப்பார்கள்.

அதாவது உண்மையில் உள்ள எல்லாரும் 40- 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிடித்தமான துறையை விடுவித்து அரசியலில் நுழைவார்கள். உலகம் முழுவதும் இப்படி தான் நடக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் குடும்ப அரசியல் நடக்கிறது. அரசியலில் பொதுவான மனிதர்கள் தான் பங்கேற்று சேவைகள் செய்ய வேண்டும். ஆனால் இங்கு நிலவும் குடும்ப அரசியலால் பொதுவான மனிதர்கள் உள்ளே நுழைய முடிவதில்லை. குடும்ப அரசியலை தவிர்க்க முயற்சிப்பது பாறாங்கல்லில் தலையை மோதுவதற்கு சமமாகும். உடையப்போவது தலையா அல்லது பாறாங்கல்லா என்பதை பின்னர் பார்ப்போம்.

அரசியலில் பொதுவான மனிதர்கள் நுழையாத வரை நல்ல மாற்றங்கள் ஏற்படாது. எனவே நான் அரசியலை ஒரு அழகான பாதையாக பார்க்கிறேன். சமூகத்தில் புதிய மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறேன். கல்வி என்ற பெயரில் சமூக சேவையும் செய்து வருகிறேன். இளைஞர்களும் அரசியலுக்கு வாருங்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்த பின் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி மக்களுக்கு சேவையாற்ற அரசியலை தேர்ந்தெடுங்கள். இவ்வாறு கூறினார்.