இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம் விழுந்த பகுதியில் பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி இருந்துள்ள நிலையில் அங்கு இருந்த பயிற்சி மருத்துவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்தது. இந்நிலையில் அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கண்டறிவதற்கு அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விமானத்தின் விமானி கேப்டன் சுமீர் சபர்வாலுக்கு அவரது 88 வயதான தந்தை கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமான விபத்து நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு தான் தந்தையை பார்த்துக் கொள்வதற்காக விமான பணியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார் சபர்வால்.

மேலும் இதுகுறித்து தனது தந்தையிடம் பணியை விட்டுவிட்டு வந்து தங்களை பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் விமான விபத்தில் அவர் உயிர் இழந்துள்ளார். கேப்டன் சுமித் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானி ஆவார் இவர் கிட்டத்தட்ட 8600 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவத்தை பெற்றுள்ளார்.

அவரது தந்தை புஷ்கராஜ் டி.ஜி.சி. ஏ அதிகாரியாவார். இந்த கொடூர விபத்து நடந்து முடிந்து 6 நாட்கள் ஆகும் நிலையில் சம்பவத்திலிருந்து மீள முடியாத துயரத்தில் அனைவரும் இருந்து வருகின்றனர்.