
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மேகலாயாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் மனைவி, கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே 11ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கும் (29), அதே பகுதியை சேர்ந்த சோனம்(24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின் கடந்த மே 20 ஆம் தேதி ராஜாரகுவன்சியும், சோனமும் மேகலயாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்த இருவரும் கடந்து மே 23ஆம் தேதி நொங்கிரியாட் என்ற கிராமத்தில் தங்கியுள்ளனர். இதனை அடுத்து தம்பதியினர் இருவரிடம் இருந்தும் உறவினர்களுக்கு எந்தவித அழைப்புகளும் செல்லவில்லை. அவர்களைத் தொடர்பு கொண்ட போதும் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதறிய குடும்பத்தினர் மத்திய பிரதேச காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரை அடுத்து உத்திரப்பிரதேச மாநில காவல்துறையினர், மேகலாயா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தம்பதியினர் இருவரும் இருந்த கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் 2ஆம் தேதி ராஜா ரகுவன்சையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜா ரகுவன்சியின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், இதனிடையே ராஜாவின் மனைவி சோனம் காணாமல் போனதால் காவல்துறையினர் சோனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் முதற்கட்ட விசாரணையில் ஆகாஷ் ராஜ்புட் (19), விஷால் சிங் சவுகான் (22), ஆனந்த குர்மி ஆகிய 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜ்குஷ்வாஹா என்ற நபர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிபூரில் உள்ள நந்த்கன்ஜி காவல் நிலையத்தில் சோனம் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.
அதில் அவர் கூறியதாவது, எனது தந்தை நடத்தி வரும் பர்னிச்சர் தொழில் நிறுவனத்தில் ராஜ் பணியாற்றி வந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை ஏற்க மறுத்த சோனத்தின் குடும்பத்தினர் ராஜா ரகுவரன்சிக்கு சோனத்தை திருமணம் செய்து வைத்ததாகவும் கூறினார்.
பின்னர் திருமணம் முடிந்த நிலையில் ஹனிமூன் சென்ற இடத்தில் தனது காதலர் ராஜ் உடன் கூலிப்படைகளை வைத்து ராஜாரகுவன்சியை ரகசியமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ராஜ், சோனம் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த ரகுவன்சியின் அண்ணன் விபின் ரகுவன்சி, திருமணத்திற்கு முன்பே சோனம் தனது தாயிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்.
ஆனால் அதனை மறைத்து ஒரே சமூகத்திற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தி ராஜா ரகுவன்சிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் சோனம் “திருமணத்திற்கு பின் அந்த நபரை என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
அதன் பின் நடக்கும் விளைவுகளுக்கு நீங்கள்தான் காரணம்” என தனது தாயை முன்கூட்டியே எச்சரித்துள்ளார். ஆனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்வார் என சோனத்தின் குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.