அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வந்தவர் ஜார்ஜ் அர்பைசா (61). இவரது மனைவி தெரசா. இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது பேரக்குழந்தைகளுடன் ஹுஸ்டன் நகரத்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக ஜார்ஜ் உணவகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது உணவகத்தின்  உள்ளே இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு துப்பாக்கி சண்டையாக மாறி உள்ளது. இந்த தகராறில் அங்கு நின்று கொண்டிருந்த ஜார்ஜ் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை வெளியில் இருந்து பார்த்த அவரது மனைவி தெரசா பேர குழந்தைகளை காரில் விட்டு விட்டு செல்ல முடியாமல் தவித்ததாகவும், தனது கணவரின் நிலைமை பார்த்து மிகவும் மனம் உடைந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மேலும் அங்கு  நடத்திய விசாரணையில் சந்தேகத்தின் பெயரில் அன்டோனியா ரிட்ஜி என்பவர் தற்போது ஹாரிஸ் கவுண்ட்டீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் பயன்படுத்திய துப்பாக்கி “கிளாக் ஸ்விட்ச்” எனப்படும் உபகரணத்தால் தானாக வெடிக்கும் வகையில் மாற்றப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையின் போது பரிதாபமாக ஜார்ஜ் உயிரிழந்தது அமெரிக்காவில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற வன்முறையை தடுக்க பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.