
சமூக வலைதளங்களில் லைக் மற்றும் பாலோவர்ஸ்களை அதிகரிக்க ஆபத்தான முறையில் இளந்தலைமுறைகள் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடல் அலை, உயர்ந்த மலை என இயற்கை சீற்றம் காணப்படும் இடங்களிலும், விரைவாகச் செல்லும் ரயிலின் முன்பு செல்பிகளை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் இந்த ஆர்வம் சில சமயங்களில் ஆபத்தில் முடிகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஷகிலா பானு என்ற அந்தப் பெண் ரயிலின் படிக்கட்டில் நின்றபடி ரீல்ஸுக்காகவும், லைக்குக்காகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரயில்வே காவல்துறையினர் அந்தப் பெண்ணின் முகவரியை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.