பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை நியமித்து வருகிறார். இந்நிலையில், பாமக சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, கடந்த ஐந்தாண்டுகளாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் அவராகவே இல்லை.

வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தையாகவே மாறி வருகிறார். இதுவரை நான் தலைவராக வேண்டும் என எப்போதும் நினைக்கவில்லை. அவருக்குப் பிறகுதான் தலைவராக வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.

அவராகவே சொல்லி தான் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாமக தலைவராக இருந்தேன். கடந்த 2024 ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்.

சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ் கட்சிக்கும், விசிகவுக்கும் திடீர் பாசம் ஏன்?. இதுவரை ராமதாசை புகழ்ந்து பேசாத திருமாவளவன் தற்போது புகழ்ந்து பேசுவது எதற்காக?.

விசிகவின் வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சுயநலத்துக்காக ராமதாசை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவருக்கு இதுவரை புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.