ஜம்மு காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் 6 பேர் ஒரு மருத்துவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை முன்னால் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கண்டித்ததோடு பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை.

அது மத்திய அரசின் கையில் தான் உள்ளது என்றும், இது எங்களுக்கு பெரிய பிரச்சனை. பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றோம் என்றும் கூறினார். நான் 30 வருடங்களாக இதுபோன்ற வன்முறையை பார்த்து வருகிறேன் என்றும், அதனை நிறுத்துங்கள் என்று பலமுறை கூறியும் அவர்கள் நிறுத்தவில்லை. மேலும் அப்பாவி மக்களை கொன்றுவிட்டு எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று கூறியதோடு, முதலில் படுகொலையை நிறுத்துங்கள் என்றும் கூறினார். அதோடு வாழ்வாதாரத்திற்காக இங்கு வந்து வேலை பார்த்த ஏழை தொழிலாளர்கள் கொல்லப்பட்டது மிகவும் வேதனை அளிக்கின்றது.

எங்களை கண்ணியத்துடன் வாழவிடுங்கள் என்று கூறிய அவர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் உத்தரவை நிலை நாட்ட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வளவு காலம் தான் எங்களை கஷ்டப்படுத்துவீர்கள், அப்பாவிகளை கொன்று பிரச்சினையை ஆரம்பித்தீர்கள். உங்கள் முயற்சி 75 வருடங்களாக வெற்றி பெறவில்லை என்றால் இப்போது எப்படி வெற்றி பெற முடியும். உங்கள் சொந்த நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்.

அதோடு நாங்கள் இங்கு வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து வெளிவர விரும்புகின்றோம். அதை பயங்கரவாதத்தின் மூலம் சாதிக்க முடியாது. இது தொடர்ந்தால் நாங்கள் எப்படி முன்னேறுவோம் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவ்வாறு நிறுத்தவில்லை எனில் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.