தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திகேயன் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார்.

இதனையடுத்து தனது நண்பர்களான ஜீவானந்தம், ஹரி, மாதவன் உள்பட 8 பேருடன் கார்த்திகேயன் வடபுதூர் பகுதியில் இருக்கும் தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திகேயன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கார்த்திகேயனின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே கார்த்திகேயனின் தந்தை திருப்பதி தனது மகனின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.